Tuesday, March 20, 2018

ஊழல் - உளவு - அரசியல்


அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்.
கதையை மிஞ்சும் நிஜம். கற்பனைக்கும் எட்டாத சாகசம். உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்.
(அட்டைப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்) 

ஒவ்வொரு வாசகனையும் அது எந்தளவுக்கு புரட்டிப்போடப்போகின்றது என்பதற்கான எச்சரிக்கைக்காகவே அவை எழுதப்பட்டிருக்கக்கூடும். 

வணிகம் சார்ந்து என்னத்தையாவது எழுதிவிடவேண்டும் என அல்லாமல் எந்தவொரு அலங்காரப் புனைவுகளுமின்றி முழுக்க முழுக்க அதன் இயல்பிலேயே ஒன்றி உயிரோடும் வார்த்தைகளைக் கோர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்நூல். சாமானியன் ஒருவனாய் இருந்து ஊழலால் கரைப்படிந்திருக்கும் அரசு இயந்திரத்தை அசைத்துப் பார்க்க துணிந்தபோது தன்னை அடிபணியவைக்க எடுக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்து சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க தானெடுத்த முயற்சிகளில் எவ்வாறு இறுதியில் வெற்றி அடைந்தார் என்பதைப்பற்றி பேசுகின்ற ஓர் உண்மைக்கதை. வஞ்சனையால் புதைக்கப்பட இருந்த அரும்பெரும் தன் வரலாற்றை தனியொருவனாகவே நின்று சுயமாக போராடி மீட்டுருவாக்கி வென்று காட்டிய‌ வகையில் இந்த படைப்பு நமக்கு கிடைத்திருக்கிற ஒரு அரிய பொக்கிசம்.

ஒரே இரவில் இந்நூலைப் படித்துமுடித்தேன். அந்தளவிற்கு எழுத்தாளர் இந்தப்புத்தகத்தில் தன் எழுத்துக்களால் வாசகனோடு உரையாடுகின்றார். பேசுகின்றார். உற்சாகமூட்டுகின்றார். சிரிக்கவைக்கின்றார். அழுகின்றார். அழவைக்கின்றார். எங்கெங்கோ அவர்கடந்த பாதைகளில் வாசகனின் கைப்பிடித்து கூட்டிச்செல்கின்றார். பயணிக்கவைக்கின்றார். கற்பிக்கின்றார். சிந்திக்க வைக்கின்றார். உறவாடுகின்றார். இப்படியாக வாசகனின் அசைவுகளைக் கட்டிப் போடுகின்றார். எந்த இடத்திலும் சலிப்பு தட்டவேயில்லை. அவரைப்போலவே சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அவரது எழுத்துகளும் நம்மைப்பயணிக்க வைக்கின்றன. 

சாதாரணக்குடும்பத்தில் பிறந்த சங்கர், தனது தந்தை அவரது அரசுப்பணிக்காலத்திலேயே திடீர் மறைவடைந்ததால் அதன்வழி கிடைத்த அரசுப்பணியில், தன் பள்ளிப்படிப்பை முடித்தக்கையோடு தனது பதினாறு வயதிலேயே சேர்கிறார். ஆழ்ந்த சிந்தனையும், தொடர்ந்த வாசிப்பும், அயராத உழைப்பும் கொண்டிருந்தமையால் நாளும் சிறப்படைந்து வருகின்றார். ஆரம்பத்தில் பெரியாரியம், அதைத்தொடர்ந்து இடதுசாரிய கொள்கைகளால் ஈர்க்கப்படுகின்றார். 

கலைஞர் கருணாநிதியின் அரசியல், ஆட்சி நிர்வாகம், மக்கள் நலப்பணிகள் பலசெய்திட்ட திமுகவின் பொற்காலம் தொடங்கி அலைக்கற்றை ஊழல் நடந்த திமுகவின் கெட்ட காலம் வரையிலும் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கி முதல்வரான பின் அவராடிய ஆட்டங்கள், ஊழல்கள், கீழான அரசியல் ஆட்சி நிர்வாகம் தொடங்கி திமுக காலத்தில் தம்மீதும் தம்மைச்சார்ந்தோர் மீதும் போடப்பட்ட பல்வேறு ஊழல் சார்ந்த வழக்குகளை மூட அவர் காட்டிய ஆர்வம், லஞ்ச ஒழிப்புத்துறையில் இல்லாத நடைமுறையில் ஊழல் பின்னணி கொண்ட தமக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக அமைத்து தமக்கு வேண்டியதை செய்துக்கொள்ளும் அடாவடியான ஆளுமை வரையிலும் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பட்டியலிடுகின்றார். இதுவரை நான் எனதளவில் கொண்டிருந்த ஜெயலலிதா எனும் ஆளுமையின் பிம்பம் சுக்குநூறாய் போனது. 

அடுத்ததாக அண்ணாபல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல்வர் ஒதுக்கீட்டு முறையில் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அநேக இடங்களில் அமைச்சர்கள் சிபாரிசோடு அரசு உயர்நிலை அதிகாரிகளின் பிள்ளைகள் உட்பட மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தவர்களுக்கு இடங்களை ஒதுக்கப்பட்டிருந்தது. பலகாலமாக இதுபோன்ற அராஜகங்கள் நடந்துவந்தாலும் அரசு ஊழியர்கள் தானுண்டு தன்வேலையுண்டு என்று இருக்கும் ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஊழல்கள் நடக்கின்றன என்று வருத்தப்படுவதோடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் தன்னையே களத்தில் இறக்கி செயல்படுகின்றார். அதன் பயனாய் பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியில் உச்சநீதிமன்றம் அத்தகைய ஒதுக்கீட்டு முறையை நீக்குகின்றது. இது பெரிய சாதனை அல்லவா. இதுபோன்று பல இடங்களில் தன் கண்ணுக்கு முன்னால் நடக்கின்ற அநீதிகளை தன் பலத்திற்கு உட்பட்டோ மீறியோ காரியத்தில் இறங்கி சாதித்திருக்கிறார். 

கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியில் வேலையில் இருந்த சங்கருக்கு தன் தலையெழுத்தையே மாற்றப்போகும் அளவிற்கான சிக்கல் உண்டாகின்றது. தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கின்றார். சிறைத்துறையிலும் நீதித்துறையிலும் நடந்த (நடக்கின்ற) அநீதிகளைச் சொல்லிச் செல்கின்றார். 

சிறைவாசத்தில் பெற்ற அனுபவத்தை நிறையவே பகிர்ந்திருக்கின்றார். பீடிக்கட்டுகள்தான் சிறைக்குள் பணமாகி இருப்பதைப்பற்றியும் விவரிக்கின்றார். சிறை நிர்வாகத்தில் நடக்கும் ஊழலைப்பற்றியும் அரசியலைப்பற்றியும் சொல்கின்றார். பணவசதி இல்லாதவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கும் ஏனையோர்கள், தங்கள் குற்றத்திற்கு தண்டனைக் கிடைத்தாலும் கிடைக்கக்கூடிய காலத்திற்கும் அதிகமாய் விசாரணை என்ற போர்வையில் விசாரணை நீட்டிக்கப்பட்டு அநியாயமாய் சிறையில் தண்டிக்கப்படுவதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றார். பின்னாளில் ஜாமீனில் வெளிவந்தபிறகு சிறையில் சந்தித்த இசுலாமிய நண்பர் ஒருவருக்கு வழக்கிலிருந்து வெளிவர அவரது உண்மைத்தன்மையை ஆராய்ந்து வைத்து, தன்னால் முடிந்தவரை உதவிசெய்ய முயன்று, செயலை முடுக்கிவிட்டு அதில் வெற்றியும் அடைகின்றார். 

நீதித்துறையில் வெளிப்படையாக பார்க்கும் பொழுது எல்லாம் சரியான முறையில் நடப்பது போன்று தோன்றுவது மாயை என்றதோடு அங்கு உள்ளே நடக்கின்ற அவலங்களை தோலுரிக்கின்றார். அரசியல் காரணமாக ஒரு வழக்கை எத்தனை நீதிபதிகள் விசாரிக்கின்றனர் என்பதும், ஒரு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கவிருக்கும் வேளையில் நீதிபதி மாற்றப்படும் மோசடி நடப்பதையும் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திச் சொல்கின்றார்.

ஒருமுறை நீதிமன்ற அறையைவிட்டு வெளிவரும் பொழுது தன்மேல் கொண்ட ஆத்திரம் மற்றும் விரக்தியால் பொய் புனைவுகளோடு குற்றம்சாட்டிய அதே டிஎஸ்பி பாலு நிற்கின்றார். அப்போது சங்கர் அவரருகில் சென்று 'என்ன பாலு, எப்படி இருக்க?' என்று கேட்கும்பொழுது அட்டகாசம். (ஒரு பி.ஜி.எம் பின்னால ஓட விட்டுருந்தமாதிரி இருந்துச்சு.)

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இவரது வழக்கும் நடக்கின்றது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்னும் முதுமொழிக்கேற்ப, ஆரம்ப காலத்தில் அதிகாரிகளால் இவர்மீது பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையின் மீது இறுதிக்கட்ட குறுக்குவிசாரணையில் சில சாட்சியங்கள் இறந்தும் பல சாட்சியங்கள் முன்பு பொய் சொல்லிவிட்டு பின்னர் பிறழ் சாட்சியங்களாய் மாறின. பல போராட்டங்களின் விடியலாய் ஓர்நாள், சாட்டப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களிலும் இருந்து சங்கர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார். 

சங்கர் அவர்களின் வாழ்வில் பல இடங்களில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து, அவருக்கு பலவழிகளில் உதவி செய்திட்ட மனிதர்களை பட்டியலிட விரும்புகின்றேன். பேராசிரியர் கல்யாணி, எஸ்.பி. அருண், நண்பர் ராஜசேகர், முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி உபத்யாய், வழக்கறிஞர் புகழேந்தி, டெகல்கா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மணிகண்டன், மற்ரும் இறுதி குறுக்கு விசாரணையின் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர்களை போற்றுகின்றேன். 

இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு துரும்பை எடுத்துப் போட்டதால்தான் தம்மால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நீந்திக் கரையேற முடிந்திருக்கிறது என்று சொல்லுவதோடு, இதுவரை பட்டதற்கு வருத்தப்படவில்லை மாறாக பெருமைப்படுவதாகவும் எழுத்தாளர் சொல்லி முடிக்கின்றார். 

சங்கர் அண்ணனுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும். 

இதுபோன்று நிறைய சங்கர்கள் மறைந்து வாழ்ந்தும் வரலாம். பிரச்சினைகளில் சிக்குண்டும் இருக்கலாம். சமூகத்திற்கு உதவ நினைத்து தன் நலன்களை இழந்தும் நிற்கலாம். தயவு செய்து உங்கள் கண்முன்னால் அப்படி யாரேனும் இருந்தால் தோள் கொடுத்து அவர்களை நிமிரச்செய்யுங்கள். அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு வடிகாலாய் மட்டும் அமைந்துவிடாதீர்கள். நீங்களும் அரசு வேலைப்பார்ப்பவராய் இருந்தால் மறைமுகமாகவாவது உங்களால் முடிந்த அளவிற்கு வேண்டிய உதவியை செய்ய முன்வாருங்கள். நமக்கு சங்கங்களை விட இப்போது நிறைய சங்கர்கள் தான் அவசியமும் தேவையும் கூட. 

இதுவே சவுக்கு சங்கர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பார் என்பது எனது அனுமானம். 

நன்றி
அங்குராசன். (https://www.goodreads.com)
23-02-2017

No comments:

Post a Comment