Sunday, July 9, 2017

மறைந்திருக்கும் உண்மைகள் ஓஷோ

அமேசானில் ஆர்டர் செய்ததில் அடுத்தநாளே வீட்டுக்கு வந்து விட்டது. பல ஆச்சர்ய உண்மைகளை  உள்ளடக்கிய புத்தகம். அவற்றில் இருந்து சில பகுதிகள்  

   
அணு ஆராய்ச்சிக்கூடத்தில் ‘அணு விஞ்ஞானிகளைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழையக்கூடாது’ என்ற அறிவிப்பை ஒப்புக் கொள்கிற நாம், கோயில் விஷயத்தில் ஒப்புக் கொள்வதில்லை! கோயிலுக்கு என்று ஒரு தனி விஞ்ஞானம் இருப்பது நமக்குத் தெரிவதில்லை! கோயில்களும் தீர்த்தாடன மையங்களும் குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டுமே ஆனவை! ஒரு நோயாளியைச் சுற்றி, மருத்துவர்கள் நின்று கொண்டு, அவனுடைய நோயைப் பற்றி விவாதிக்கிறார்கள். அது நோயாளியின் காதில் விழுகிறது. ஆனால் விளங்குவதில்லை. கிரேக்க, லத்தீன் கலைச் சொற்கள் கொண்டு அவர்கள் பேசுவதால் புரிவதில்லை.
இதேபோல, ஒவ்வொரு மதமும் தமக்கேயான குறியீட்டு மொழியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

அதனால், நாம் நினைத்திருக்கிற இடங்கள் மெய்யானவை அல்ல; தவறானவர்கள் கைகளுக்குப் போய் விடக்கூடாது என்றும், தவறாகப் பயன்பட்டு விடக்கூடாது என்றும் அவற்றைப் பாதுகாத்து வந்திருக்கிறது மாபெரும் மரபு. பொதுமக்களுக்கு அவற்றால் சிரமங்களே தவிர எந்தப் பயனும் இல்லை. ‘அல்குஃபா’ ஊருக்குள் நுழைந்தால் பைத்தியம் பிடித்துவிடும்! எதிர்பாராமல் நுழைகிறவரும் பைத்தியம் பிடித்தே வெளியே வருவார்! ‘அல்குஃபா’வில் உருவாகும் சக்தி அலை அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி, சாதாரண மனிதர்களுக்கு இல்லாமற்போவதுதான் அதற்குக் காரணம். ஆனால், சரியான முன் தயாரிப்பும், கட்டுப்பாடும் இல்லாமல், அதற்குள் நுழையாமல் இருப்பதே நல்லது.

‘அல்குஃபா’வின் சில அம்சங்களைப் புரிந்து கொண்டால், நமது தீர்த்த யாத்திரைத் தலங்களைப் புரிந்து கொள்வது எளிது. ‘அல்குஃபா’வில் உறங்க முடியாது என்று சொல்கிறார்கள்! அதனால், விழித்திருக்கும் அனுபவம் இல்லாதவர்கள் அங்கே பைத்தியமாகி விடுகிறார்கள்! இரவில் விழித்திருப்பதுதான் சூஃபி ஞானிகளின் மாபெரும் ஆற்றல். இரவு முழுவதும் விழித்திருக்க அவர்களால் முடியும். ஒருவர் தொண்ணூறு நாட்கள் உண்ணாமல் இருந்தால் மிக மிகப் பலவீனமாகிவிடுவார். ஆனால், செத்துவிட மாட்டார்; பைத்தியமும் பிடிக்காது. சாதாரண ஆரோக்கிய மனிதர்கள் தொண்ணூறு நாட்கள் உண்ணா நோன்பை எளிதில் மேற்கொள்ள முடியும். ஆனால், இருபத்தோரு நாட்கள் உறங்காமல் இருக்க முடியாது!

மூன்று மாதம் உண்ணாமல் இருக்க முடிந்தாலும் மூன்று வாரம் உறங்காமலிருக்க முடியாது. மூன்று வாரம் என்பது கூட அதிகம்தான். ஒரு வாரமே சிரமம். ஆனால், ‘அல்குஃபா’வில் உறக்கமே சாத்தியமில்லை! இலங்கையிலுள்ள யாரோ ஒருவர், ஒரு புத்த சன்னியாசியை என்னிடம் அனுப்பி வைத்தார். அவரால் மூன்று ஆண்டுகளாக சரியாகத் தூங்க முடியவில்லையாம். நாள் முழுவதும் அவரது கை கால்கள் நடுங்கிக் கொண்டே இருந்தன. தொடர்ந்து வியர்வையும் வழிய, மிகவும் சிரமப்பட்டார். காலடி எடுத்து வைக்கவே பயம்! எல்லா சுய நம்பிக்கைகளும் இழந்தவராகி விட்ட அவர், சற்று மனம் பேதலித்தவராகவும் காணப்பட்டார். வலிய எடுத்துக்கொண்ட தூக்க மருந்துகளாலும் உறக்கம் வரவில்லை. சும்மா நிம்மதியில்லாமல் படுத்துக் கிடப்பார். ஆனால், உள்ளூர விழிப்பு இருந்து கொண்டே இருந்தது.

புத்தரின் ‘அனபனாசதி யோகத்தை’ப் பயன்படுத்தினீர்களா என்று அவரைக் கேட்டேன். பௌத்த சன்னியாசிகளுக்கு அது தவிர்க்க முடியாத ஒன்று. அவர் ‘ஆமாம்’ என்றார். அப்படியானால் தூக்கத்தை மறந்து விட வேண்டியதுதான். அந்த யோகத்தின் விளைவு உறக்கமின்மைதான். ஆனால் அது ஆரம்ப கட்டம்தான். உறக்கமின்மைக்கு அடுத்த கட்டம் உண்டு. அதற்குள் செல்ல வேண்டும், உடனே. முதல் கட்டத்திலேயே நின்று கொண்டிருந்தால், பலவீனம்தான் விளையும். பைத்தியமும் பிடிக்கலாம். மரணமும் சம்பவிக்கலாம்! உள்ளிருக்கும் உறக்கம் அழிக்கப்பட்டவுடனே பிரக்ஞையின் தன்மை மிகவும் மாறிவிடும். அப்போது, அடுத்த வளர்ச்சி நிலைக்கு உடனே நகர்ந்துவிட வேண்டும். 

அந்த இரண்டாவது கட்டம் என்ன என்பது தெரியுமா என்று, அந்தத் துறவியைக் கேட்டேன். ‘அது பற்றி யாருமே சொல்லவில்லை’ என்றார் அவர்.
இரண்டாவது கட்டம் பற்றி புத்தகம் எதிலும் சொல்லப்படவில்லை, முதல் கட்டத்தை எழுதி வைப்பதும் ஆபத்துதான். காரணம் முதற்கட்ட இறுதியில் உறக்கமின்மை பற்றிக் கொள்கிறது. அதனால்தான், சில விஷயங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன. யாருக்கும் தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆன்மத் தேடலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உதவுவதற்காகவே, வழிகாட்டுவதற்காகவே அவை அமைந்துள்ளன. அதனால்தான் தீர்த்த யாத்திரைத் தலங்கள் தேவைப்படுகின்றன. அதே சமயம் மெய்யான இடங்கள் மறைத்தும் வைக்கப்படுகின்றன. சரியான பக்குவநிலை வரும்வரை, விலகி இருக்கச் செய்யவே பொய்யான இடங்கள் உருவாக்கப்படுகின்றன. 

தப்பான ஆள் சரியான இடத்தை நெருங்கவே முடியாது. சரியான ஆள் எப்படியும் கண்டுகொள்வார். ஒவ்வொரு தீர்த்த யாத்திரைத் தலத்தின் மர்மத்தைத் திறப்பதற்கும் அதற்கான பிரத்யேக சாவி இருக்கும். சூஃபி மகான்களின் புனித இடங்களை, சமணரின் சாவி கொண்டு திறக்க முடியாது. அதுபோல சூஃபிகளின் சாவி கொண்டு சமணப் புனித தீர்த்தத்தைத் திறக்கவும் முடியாது. ஒவ்வொரு சமயத்திற்கும் தனிப்பட்ட திறவுகோல் இருக்கவே செய்கிறது. அதைச் சொல்ல நான் விரும்பவில்லை. என்றாலும் ஒன்றைச் சான்றாகச் சொல்கிறேன். திபேத்தியர்களுக்கு தனிப்பட்ட ரகசிய வரைபடங்கள் அல்லது யந்திரங்கள் இருக்கின்றன. அவைதாம் திறவுகோல்கள். இந்துக்களுக்கும் அம்மாதிரியானவை ஆயிரக்கணக்கில் உண்டு. வீடுகளில் அவர்கள் ‘லாபா-சுபா’ என்பது போன்ற சில வாசகங்களை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். 

அதற்கு வளமும்-நலமும் என்று பொருள். அதற்கடியில் சில எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை குறியீடுகள். அவை புனிதத் தலங்களின் திறவு கோல்கள். ஆனால் அவை எதற்கு என்று அவர்களுக்குத் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள் என்று இவர்களும் செய்து வருகிறார்கள். வெளியில் குறிப்பிடப்படும் உருவம் ஒவ்வொன்றும் உமக்குள்ளே பிரக்ஞையில் ஒரு உருவத்தை உருவாக்கிவிடும். சான்றாக, சாளரத்தின் வழியாக சில நிமிடங்கள் வெளியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கண்களை மூடினால், சாளரச் சதுரத்தின் ‘நெகடிவ்’ வடிவம் மனக்கண்ணில் தோன்றும். அதே போல ஒரு யந்திரத்தைப் பார்த்தபடி தியானம் செய்தால் உங்கள் மனதில், அந்த வடிவம் அல்லது எண்ணின் எதிர்மறை வடிவத்தை உருவாக்கிக் காட்டும். 

சில சிறப்பு தியானப் பயிற்சிகளுக்குப் பிறகு இதை நம்மால் காணமுடியும். அந்த யந்திரம் மனதில் தோன்றிய பிறகு, சில வழிபாடுகள் செய்தால், ஆன்மிகப் புனித யாத்திரை உடனே ஆரம்பமாகி விடும், உள்ளே. முல்லாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக ஒரு கதை. அவர் தம் கழுதையைத் தொலைத்து விட்டார். அது ஒன்றுதான் அவர் சொத்து. ஊர் முழுக்க அதைத் தேடிப்பார்த்து விட்டார். கிடைக்கவில்லை. பரிதாபப்பட்ட கிராம மக்களும் தேடிப் பார்த்தார்கள். கிடைக்கவில்லை. அது ஒரு புனித மாதம். ‘யாத்ரீகர்கள்’ அந்த ஊர் வழியாகத் தலயாத்திரை சென்று கொண்டிருந்த காலம். கழுதை அந்தக் கூட்டத்தோடு போயிருக்கலாம் என்று ஊரார் சொன்னார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று முல்லா நஸ்ருதீனும் நினைத்து, கழுதை இனிக் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். 

என்றாலும், கடைசியாக ஒரு முயற்சி செய்து பார்த்து விடுகிறேன் என்றார் அவர். அப்படிச் சொல்லிவிட்டு, அங்கேயே அப்படியே நின்று, கண்களை மூடிக்கொண்டார்! பிறகு, சட்டெனக் குனிந்து கை கால்களால் ஒரு விலங்கு போல நடக்க ஆரம்பித்தார்! வீட்டைச் சுற்றிப் போனார்! பிறகு, தோட்டத்தைச் சுற்றி வந்தார்! அப்புறம் அப்படியே நடந்து போய் ஒரு பெரிய பள்ளத்தில் பார்த்தார்! அந்தப் பள்ளத்தில்தான் அவரது கழுதை விழுந்து கிடந்தது!
நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ‘இது எப்படி? எப்படி இதைச் செய்யத் தோன்றியது? ஏன்?’ என்று கேட்டார்கள். முல்லா பதில் சொன்னார்: ‘ஒரு மனிதனால் தன் கழுதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், திறவுகோல் அவனிடம் இல்லையென்று அர்த்தம். 

அதனால், கழுதையைக் கண்டுபிடிக்க நான் கழுதையாக வேண்டி வந்தது? நான் கழுதையானவுடனே, ஒரு கழுதையே எங்கே தேட வேண்டும் என்பது தெரிந்து விட்டது. கழுதை எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியாதுதான். ஆனால், கழுதையாய்க் கண்களை மூடி நடந்தேன். கண்களைத் திறந்தபோது எதிரே பள்ளம்! அதில் என் கழுதை!’ என்றார் அவர். முல்லா நஸ்ருதீன் ஒரு சூஃபி ஞானி. இந்தக் கதையைப் படிப்பவர்கள் சும்மா சிரித்து விட்டுப் போய்விடுவார்கள். ஆனால் அதற்குள் ஒரு திறவுகோல் இருக்கிறது. தேடலுக்கான சாவி அது. ஆன்மத் தேடலுக்கு அது ஒன்றுதான் வழி. அதனால், ஒவ்வொரு புனித இடத்திற்கும் ஒரு சாவி இருக்கிறது. அது யந்திர வடிவிலும் இருக்கும். அப்படிப்பட்ட இடங்கள், உங்களை, சக்தி வாய்ந்த வெள்ளப் பெருக்கின் நடுவில் 
தள்ளிவிட்டு விடுகின்றன. அப்புறம் நீங்கள் சிரமமின்றி வெள்ளத்தின் போக்கிற்கேற்ப மிதந்து செல்லலாம்.

இன்னொரு முக்கியமான அம்சம், மனித வாழ்வில் பிரக்ஞை ஒன்றைத் தவிர, மற்ற எல்லாமே பொருள்கள்; பொருளால் உருவாக்கப்பட்டவை, உருவானவை. ஆனால், உள் பிரக்ஞை என்ன என்பது நமக்குத் தெரியாது. நமது உடலை நமக்குத் தெரியும், இது எல்லா வகையிலும் பொருளோடு தொடர்புடையது. ரசவாதம் பற்றிய சில விஷயங்களை நாம் இப்போது புரிந்து கொள்வது நல்லது. அப்போதுதான் புனித தலங்களின் இரண்டாவது அம்சத்தை, அர்த்தத்தைப் புரிந்து கொள்ளமுடியும். ரசவாத வித்தையின் வழிமுறை மதத்தின் வழிமுறைதான். தண்ணீரை நீராவியாகவும் நீராவியை மறுபடியும் தண்ணீராகவும் இதையே மறுபடியும் நீராவியாகவும் இப்படியே ஆயிரக்கணக்கான முறை, ஒரே நீரைச் செய்து கொண்டே வந்தால், அந்தத் தண்ணீர் ஓர் அபூர்வமான சக்தியைப் பெற்றுவிடும்!

சாதாரணத் தண்ணீரும் அதுவும் ஒன்றல்ல. ஆரம்பத்தில் இது ஒரு வேடிக்கை போலதான் தோன்றும். இதனால், தண்ணீரின் தன்மை எப்படி மாறும்? தண்ணீரை மீண்டும் மீண்டும் வடிகட்டி சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பதால், அதன் குணம் எப்படி மாறும்? அது சுத்தமாக இருக்கும்; அவ்வளவுதான். ஆனால், இன்று அறிவியல், நீரின் பண்பு மாறுகிறது என்பதை ஒப்புக் கொள்கிறது. அது எப்படி என்று தெரியாவிட்டாலும், பண்பு மாற்றம் ஏற்படவே செய்கிறது. பல்லாயிரம் முறை அப்படியே செய்து கொண்டு வந்தால், மிகச் சிறந்த தூய நீர் கிடைக்கவே செய்யும். உங்கள் உடலின் 70 சதவீதம் பகுதி தண்ணீர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடல் நீரின் ரசாயனக் கலவையும் அப்படித்தான். 

சரியான அளவு உப்பைச் சாப்பிடவில்லையானால், உடலின் உப்பு அளவு குறைந்து போய்விடும். கடல் நீரில் உள்ள அளவை விடக் குறைந்துவிடும்.
உடலின் உப்பு அளவு குறையும்போது உங்கள் பிரக்ஞையிலும் மாற்றம் ஏற்படும். ஆயிரம் மடங்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தினாலும் உங்கள் விருப்பங்கள் மனப்போக்குகளில் மாற்றம் ஏற்படும். ரசவாதிகள் இன்னொரு வகையான சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். தண்ணீரை லட்சக்கணக்கான முறை தூய்மைப் படுத்த வேண்டுமானால் பல ஆண்டுகள் பிடிக்கும். அதனால், ஒவ்வொரு நாளும் அதைச் செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது, ஒரு நாள் கொதிக்க வைப்பது; மறுநாள் குளிர வைப்பது. இது இரு வகையான மாற்றங்களை ஏற்படுத்தும். ஒரே வகையாகச் செய்து கொண்டிருந்தால் சலித்துப் போய்விடும், சில நாட்களிலேயே. 

அதனால் அவர் தம் சோதனையை நிறுத்தி விட்டுப் பழைய மனநிலைக்குத் திரும்பிவிடுவார். அந்த வேளையில் அவரது சலிப்பே ஒரு திருப்புமுனையாகி விடும். அந்தச் சலிப்பே புதிய பிரக்ஞையாகப் பிறப்பெடுத்து விடும். நாள்தோறும் இரவு பத்து மணிக்குப் படுக்கப் போய்க் கொண்டிருந்தால், பிறகு அந்த நேரம் வந்ததும் உறக்கம் கண்களைச் சுழற்றும். அப்போது தூங்கப்போகாமல் விழித்திருக்க முயன்றால், அரைமணி நேரம் கழித்து அதிகமாக உறக்கம் வரும் என்றுதான் நினைப்போம். ஆனால், அப்படி நிகழ்வதில்லை! உறக்கம் சுத்தமாகக் கலைந்து போய், காலையில் காணப்பட்டதை விட அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது! அந்தப் பத்து மணி ஒரு திருப்பு முனையாக மாறி விடுகிறது. அந்த நேரம் வழக்கமாகத் தூங்கும் நேரம். அதைப் புறக்கணித்தால், உடலின் வழக்கமான இயக்கமுறை, ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடுகிறது. நாம் விழித்திருக்க வேண்டும் என்பதை உடல் புரிந்து கொண்டு விடுகிறது. 

அதனால், அது, தான் சேமித்து வைத்திருக்கும் அணையிலிருந்து, உற்சாக வெள்ளத்தைத் திறந்து விட்டு விடுகிறது. அப்புறம் உறக்கம் எப்படி நிற்கும்? 
உற்சாகம்தானே நிலைக்கும்! ஆயிரம் மடங்கு நீரைத் தூய்மைப் படுத்தியவர் சலித்துப் போவார். அவரது குரு தொடர்ந்து செய்யச் சொல்லலாம். இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகள் செய்யச் சொல்லலாம்! சகிக்க முடியாத ஒரு கட்டம் வரும். இனி ஒரு முறை செய்தால், செத்தே விடுவோம் என்ற நிலை! ஆனால், குரு தொடர வற்புறுத்துகிறார்! அதனால், ஒரு பக்கம் நீரின் தரம் கூடுகிறது. மறுபக்கம் அவரது மனோபாவம் மெதுவாக மாற்றம் அடைந்து விடுகிறது. அப்புறம் அந்தச் சிறப்பான தூயநீர், பயன்படுத்துகிறவர் பிரக்ஞையையும் மாற்றி விடுகிறது. அது கங்கை நீரைப்போல! மற்ற உலக ஆற்று நீர்களை விட வேறு சில தனிப்பட்ட அம்சங்கள் கங்கை ஆற்று நீருக்கு ஏன் இருக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டிபிடிக்க முடியவில்லை.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், 

No comments:

Post a Comment