Saturday, September 17, 2016

நகைக்கடைக்காரர்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் நமக்கு லாபமா?


நீங்கள் எந்த ஒரு நகைக்கடைக்கு போய் ஏதாவது ஒரு நகையோ, நாணயமோ, அல்லது பழைய நகையை சரி செய்யவோ போனாலும் அந்த நகைக்கடை ஊழியர் உங்களிடம் கண்டிப்பாக நகை சேமிக்கும் திட்டம் பற்றி விளக்கி அதில் இணையுமாறு கேட்டு கொள்வார். அனேகமாக பெரும்பாலான மக்கள் மாதம் மாதம் பணம் செலுத்தி வரவும் கூடும்.

 இந்த நகைத்திட்டம் லாபம் கொடுக்கிறதா?  இது உண்மையில் நமக்கானது தானா? இதைப் பற்றி மத்திய அரசு என்ன கூறுகிறது?
  மத்திய அரசு கடும் விதிகளை இதற்காக விதித்துள்ளது, காரணம் இதில் பொது மக்கள் அதிகமாக ஏமாற்ற படும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், ஏமாற்ற பட்டு விட்டார்கள் என்பதாலும்.

முதலில் இதை பொதுமக்களுக்கான திட்டம் என்பதையே மறுக்கிறது, இதை நகைக்கடைகாரர்களின் முதலீடாகவே பார்க்கும் அரசு, "கணக்கு வழக்கில்லாமல் மக்களை இதில் சேர்க்க கூடாது, கடையின் முதலீட்டில் அல்லது மொத்த சொத்தில் குறிப்பிட்ட சதவீதமே வாடிக்கையாளர்களை சேர்க்கலாம், அதுவும் குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே"  என்கிறது.

 என்னதான் நம்மிடம் ஆசை வார்த்தை காட்டினாலும், இது முழுக்க கடைக்காரர்களின் நலனுக்கான முதலீட்டு திட்டமே, அரசு இந்த கெடுபிடிகளை விதித்ததன் காரணம், பல கோடி லட்சம் பணம் இதில் புரள்கிறது, அதாவது பல கோடி சேர்ந்த பிறகு விலை குறைவாக மொத்தமாக நகை வாங்கி விற்பனை செய்வதே இதன் மூலம். இதில் ஏமாற்று அதிகமாகி புகார் வருகிறது, எல்லோரும் ஏமாற்ற வாய்ப்பில்லை எனினும், தங்க நகை மேல் இருக்கும் மோகம் காரணமாக மக்களிடம் இதில் நாற்பது சதவிகிதம் அளவுக்கு திருட்டு நடக்கிறது.

 இதில் தங்க நாணயமோ, அல்லது கட்டிகளோ வாங்க இயலாது, எக்காரணம்  கொண்டும் பணம் திருப்பி தரப்பட மாட்டது, கட்ட தவறும் போது அதற்க்கு உண்டான நகையை சலுகைகளுடன் பெற இயலாது. அந்நாளைய ரூபாயில் நகை கிடைக்கும், நகையாக மட்டுமே வாங்க இயலும் என்பது இவர்கள்  சொல்லும் விதிமுறைகள்.

யோசித்து பாருங்கள், நாம் எப்போதாவது செய்கூலி சேதாரம் என கணக்கிட படும் தொகையில் திருப்தியாக நகை வாங்கி இருக்கிறோமா? பவுன் சுமாராக  21000 எனில் அதை ஏதேதோ கணக்கிட்டு 30000 வரை நம் தலையில் கட்டுகிறார்கள் தானே?  நம் பணத்தை பெரும் முதலீடாக்கி, அதில் நகை வாங்கி, நம்மிடம் சில நூறு இருநூறு கவர்ச்சி பொருட்களை தருவதாக ஆசை காட்டி, செய்கூலியிலோ சேதாரத்திலோ கொஞ்சம் தள்ளுபடி தந்து அவர்கள் நகையையும் விற்பனை செய்து இன்னொரு புதிய விற்பனை கட்டிடம் திறந்து விடுகிறார்கள். அவர்கள் உயர்வதற்க்கு தானே நம் பணம்?

நகை பெரும் முதலீட்டு பொருள் தான் அதை நீங்கள் தங்க காசாகவோ, கட்டியாகவோ வாங்கும் வரை, இதை நீங்கள் எப்படிப்பட்ட நகை வாங்கினாலும் கடைக்காரர்களுக்கு இலாபமே. அதுவுமில்லாமல் உங்களுக்கு பிடிக்காத டிசைன் இருந்தால் வேறு கடைகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லை, அதில் ஏதோ ஒன்றை தான் வாங்க வேண்டும். ஆர்டர் எனில் ஒரு மாதம் இரண்டு மாதம் இழுத்தடிக்க வாய்ப்பு உண்டு.

நகைக்கடை ஊழியர்கள் சம்பளம், acயும், கட்டிட வாடகையும், அல்லது சொந்த கட்டடங்களுக்கு emiயும், பராமரிப்பு செலவுகளும், அதையும் தாண்டி இலாபமும் தானே முதல் இலாக்காக எல்லா தனியார்  நிறுவனத்திருக்கும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தானே அவர்கள் தொடர்ந்து நடத்த இயலும், இன்நிறுவனங்கள் நமக்கு தங்களது சொந்த காசை செலவிடும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? தவிர அவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்ய வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.  

நடுத்தர வர்க்க சகோதரிகள் கவனிக்க வேண்டியவைகள்

தங்கத்தின் விலையை கடந்த காலத்தின் ஏற்ற இறக்கங்களை வைத்து உற்று நோக்கினால் கணிக்க முடியும்.

ஆசை வார்த்தைகளை நம்பி இதில் முதலீடு செய்யாதீர்கள்.

நியாயமான வட்டி விகிதத்தை வங்கிகள் உங்களுக்கு தருகின்றன, அதில் முதலீடு செய்து விட்டோ, மாதம் மாதம் சேமிப்பு திட்டங்களிலோ பணம் சேர்த்து, தங்கம் விலை குறைகையில் வாங்கி கொள்ளுங்கள்.

அல்லது பணம் இருக்கும் போது ஒன்றிரண்டு  தங்க காசாக வாங்கி சேர்ப்பது முழு புத்திசாலித்தனம்.

இம்முதலீட்டு திட்டங்களில் சேர்பவர்கள் இதிலுள்ள அரசின் கட்டுப்பாடுகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.          

 உடனடியாக இணையுமாறு வற்புறுத்தி, கவர்ச்சிகர பரிசு கொடுக்கும்    நிறுவனங்களை புறக்கணியுங்கள்.

நமக்கான லாபம் என்ன எனபதை திட்ட வட்டமாக அறிந்து கொள்ளுங்கள்,
முக்கியமாக பக்கத்துக்கு வீட்டுக்காரர் முதலீடு செய்கிறார் என நீங்களும் விழாதீர்கள்.  
தங்கத்தை முதலீடு செய்யும் பொருளாக பாருங்கள், வெற்று ஆசைகளும்,  ஏமாற்றமும் இருக்காதது.

பிரபுவோ, சத்யராஜோ ஏன் அமிதாப் பச்சனோ அந்தந்த கடைகளில் நகை வாங்கி விட்டு சந்தோசமாக பேட்டி கொடுக்கவில்லை என்பதையும், அவர்கள் காசு வாங்கி நடிக்கும் வெறும் நடிகர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள், ஒரு நாளில் நூறு முறை ஒளிபரப்பாகும் அவ்விளம்பரங்களின் தொகையை உங்களிடம் இருந்து தான் ஏதாவது ஒரு வழியில் பெற முடியும் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment