Friday, June 3, 2016

இறைவி திரைப்பட விமர்சனம்

ஹீரோக்களின் ஆக்கிரமிப்பு இல்லாமல், தான் சொல்ல வந்ததை எந்த ஒரு சமரசமும் செய்யாமல், தனது பாதை விலகாமல் இந்த படத்தை கொண்டு சென்றதற்கு கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு பூங்கொத்து.

இந்த படத்தில் நாயகர்கள், நாயகிகள்  இன்னும் மற்றும் பலரெல்லாம் இருக்கிறார்கள், விசேசம் என்னவென்றால் கதையில் இருந்து கொஞ்சம் கூட துருத்தி வெளியே தெரியாமல் இருப்பதே.

பீட்சா, ஜிகர்தண்டா வரிசையில் இப்போது "இறைவி"யும் மிக வித்யாசமான கதைகளம், அதை அழகாகவும் படைத்திருக்கிறார் கார்த்திக்.

எஸ் ஜே சூர்யாவை பாராட்டியே தீர வேண்டும், அவர் தான் மொத்த படத்தையும் தாங்கி கொள்ளும் தூணே. படம் வெளிவராமல் தவிக்கும் இடங்களிலும், குடிக்கு அடிமையாகி டாஸ்மாக் வாசலில் கடை திறக்க காத்திருக்கும் காட்சியிலும், தனது கோபத்தை கட்டு படுத்தத் தெரியாமல் கத்தி விட்டு, பின் சரக்கு ஊற்றி கொடுத்தவுடன் "உன் நல்லதுக்குதான் சொன்னேன் ப்ரோ" என்று குலைவதிலும், உச்ச காட்சியில் அழுகையை அடக்கி கொண்டு அவர் போனில் தன் மனைவியுடன் பேசும் காட்சியிலும் மனிதர் சிக்ஸர்களாக அடித்து தள்ளி இருக்கிறார்.

விஜய் சேதுபதி கன கச்சிதம், கொலைவெறியை காட்டும் காட்சிகளிலும், அஞ்சலிக்காக தவிக்கும் இடங்களிலும்  உடல் மொழி அபாரம். பாபி சிம்ஹா சிறப்பு, பள்ளி உடையிலும், திருமண காட்சிகளிலும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் எப்படி மாற முடிகிறதோ இந்த அஞ்சலியால்!
கமலினியும், விஜய் சேதுபதியின் தோழியாக வரும் பூஜா திவாரியாவின் கதாபாத்திரங்கள் , இன்றைய தலைமுறையின் வேறு ஒரு தளத்தை உருவாக்குகின்றன. குறிப்பாக கொஞ்ச நேரமே வரும் பூஜா அதிர்வை ஏற்படுத்துகிறார்.  

சந்தோஷ் நாராயண் பிண்ணனி இசை வழக்கம் போல நன்று, பாடல்களும் கேட்கும்படியே இருக்கின்றன.
சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு அருமை,  அந்த மைதான காமெடி சண்டை, கேரளா கோவில், சிலை திருடும் இடங்கள்,  பாடல்கள் எல்லாவற்றிலும் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார்.

சின்ன சின்ன கேள்விகள் இருந்தாலும், ஆண்களினால் ஏற்படும், பெண்களின் வலியை, வேதனையை, இயலாமையை, கடும் நெடுக்கடியை சரியான முறையில் பகிர செய்ததில் கார்த்திக் மனம் விட்டு பாராட்ட படவேண்டியவர்.  இது போன்ற முயற்சிகளை வரவேற்றால் மட்டுமே இன்னும் சிறப்பான தமிழ் படங்கள் வரும் என்ற எண்ணத்தினால் எனது கேள்விகளை தள்ளியே வைக்கிறேன்.

தயவுசெய்து திரையரங்குகளில் காணுங்கள், அப்படி காண வேண்டிய படம் இது.
    

No comments:

Post a Comment