Tuesday, March 15, 2016

தெய்வப்பிழை சிறுகதை

ஊதா மூங்கில் இணையத்தில் தொடர்கதை மற்றும் சிறுகதை எழுதி வரும் நண்பன்... அவரின் ஒரு இணைய சிறுகதை 

திங்களுக்கு ஒருமுறை பூசாரி அருள் வந்து ஆடுவதாலையே பிரசித்தி பெற்று விட்டது அந்த கோவில். அருள் வரும் அந்த குறிப்பிட்ட நாட்களில் பூசாரி பெண்களின் நெற்றியில் குங்குமத் திலகமிடுவது வழக்கம். பூசாரி திலகமிட்டால் நல்லது எனவும், திலகமிடாமல் விட்டால் தீங்கு எனவும், அந்த கோவிலுக்கு வரும் பெண்கள் உறுதியாக நம்பினர்.

இன்று அத்தகைய அருள் வந்து ஆடக்கூடிய நாள் தான். கோவிலின் கர்ப்பக்கிருகம் முன், பெண்கள் கும்மாளாக நின்று கொண்டு இருந்தனர். கருவறையினுள் இருந்து மணியோசை வெளியேற தொடங்கியதும், பக்தி பரவசம் கொண்டனர். கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த இயந்திர மேள வாத்தியங்கள், ‘டம் டும்என ஒலிக்கத் தொடங்கியதும், தீச்சுடர் பொங்கும் பெரிய அளவு தட்டுடன் பூசாரி ஆடிக்கொண்டே கோவில் கருவறையை விட்டு வெளியே வந்தார்.

ஏய்’ ‘ஊய்’ ‘போன்ற சத்தங்களை கக்கியதும், உடலை சிலிர்த்து கொண்டு ஆடியதும், அவருக்கு அருள் வந்ததை உறுதி செய்தன. கருவறைக்கு முன், தடுப்பு கம்பிகளுக்கு நடுவே இருந்த அந்த காலி இடத்தில், அவரது அருள் நேர நடனம் அரங்கேறி கொண்டு இருந்தது.

முதலில் வெறி வந்தவர் போல் ஆடிக்கொண்டு இருந்தவர், நேரம் செல்ல செல்ல தளர்ச்சி அடைய ஆரம்பித்தார். பின் ஆட்டத்தின் வேகம் மெதுவாக குறையத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு வந்ததும், ஆடியபடியே அங்கு இருந்த பெண்களுக்கு திலகமிட தொடங்கினார்.

திலகமிட்டு கொண்ட பெண்கள், அவர் வைத்து இருந்த தட்டில் தட்சணைகளை இட, அத்தனை ஆட்டத்திலும் தட்சணைகள் தீயிடம் தஞ்சம் கொள்ளாதவாறு தடுத்து வந்தார். கும்பளலில் முதல் வரிசைக்கு பின்னால் இருந்தவர்கள், முன்வரிசைக்கு வர முயற்சித்து கொண்டு இருந்தனர். அதனால் கூட்டத்தில் ஒரே சலசலப்பாகவே இருந்தது.

திடீரென அந்த பூசாரி, ஒரு பெண்ணின் நெற்றியில் திலகமிடுவதற்கு பதிலாய், இருந்த திலகத்தை அழித்துவிட்டு சென்றார். திலகம் அழிந்த நிலையில் இருந்த பெண்ணை சுற்றி இருந்தவர்கள் அனைவரும், அப்பெண்ணை அதிர்ச்சியாக பார்த்தனர். காரணம், திலகத்தை அழித்துவிட்டு சென்றால், அவரது கணவரது உயிருக்கே ஆபத்து என்று அவர்கள் ஆணித்தனமாக நம்பினர்.

உடனே அங்க பல வார்த்தைகள் மோதியபடி ஒலிக்க தொடங்கின. முதல உன் புருசனை பத்திரமா இருக்க சொல்லுமா’, ‘உன் மாங்கல்யத்துக்கு ஆபத்து’, ‘அருள்வாக்கு முடிஞ்சதும் பூசாரிகிட்ட ஏதாவது பரிகாரம் இருக்கான்னு கேளுபோன்ற வார்த்தைகளே அவை.

அத்தனை வார்த்தைகளும் அப்பெண் காதில் இரைச்சலை கூட்டயது. அவைகளை தாங்கி கொள்ளாத அப்பெண் சற்று சத்தமாக, “ஐயோ…. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலைங்கஎனக்கூற, அங்கு இருந்த அனைவரும் கொஞ்சம் திகத்தனர்.

ஆனால், அவர்களை விட அதிகமாக திகைத்து போனது என்னவோ அந்த பூசாரி தான். இருப்பினும் ஆடலை நிறுத்தவில்லை. அவரது கருவிழிகள், கடற்ச்சுழலில் சிக்கிக்கொண்ட சிறு படகு போல வலம் வந்தது. திடீரென இல்லாத வலிமை வரவைத்து ஆத்தா……’ என அலறியபடி வேகமாக ஆடத்தொடங்கினார்.

அப்படி அவர் ஆடத்தொடங்கியதும், திகைப்பில் இருந்த பிற சிலரும் அவர் மீது அருள் பார்வை வீசத்தொடங்கினர்.

- ஊதா மூங்கில்

இவரை ட்விட்டரில் பின் தொடர விரும்பினால் கீழுள்ள இவரது பெயரை click செய்யுங்கள் 
ஊதா மூங்கில்

No comments:

Post a Comment