Wednesday, March 2, 2016

உப்புநீர்ச் சமுத்திரம்

அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களை அது நீந்தி விட்டதாம்.
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்.
வேடனின் அம்புகள் வரைந்த ஆகாய அகழிகளை
லாகவாய்ப் பாய்ந்து கடந்து
சிரிப்பு கொப்புளிக்க திசை திரும்பியிருக்கிறதாம்.
கதவுகளற்ற அதன் அரண்மனையில்
சூரியனின் கூச்சம் கூட தரை வீழ்வதில்லை.
தன் ஒற்றை இறக்கையால் வானின் கூரைபிடித்து சுழற்றி
அதை ஓர் நீர்க் குட்டையில் எறிந்துவிடவும் முடியும்.
இப்பொழுதைய அதன் தாகமெல்லாம்
உப்புநீர்ச்சமுத்திரத்தை அப்படியே குடித்துவிடுவது.
நீண்ட நேரமாக கடலின் மேலே
நின்ற இடத்திலேயே சிறகை விரித்து நின்று
தலைகுப்புறப் பாய தயாராய் இருக்கிறது என்றாலும்

கடல் ஒன்றும் அதன் மீது கோபித்துக் கொள்வதில்லை




-குட்டி ரேவதி 

No comments:

Post a Comment